பிரபல நடிகை அஞ்சலி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சினிமாவில்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நரகத்தில் உழல்கிறேன். என்னை என் சித்தியும் கொடுமைப்படுத்துகிறார். டைரக்டர் களஞ்சியமும் பணத்துக்காக கொடுமை படுத்துகிறார். என் சொத்துக்களை அபகரித்துவிட்டனர். வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு கூட, இப்போது என் பெயரில் இல்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அஞ்சலியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்தும், அஞ்சலி தன்னுடைய நற்பெயரை கெடுக்கிறார். தவறான செய்திகள் மூலம் அவதூறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை போலீஸ் கமிஷினர் ஜார்ஜிடம் பதில் மனுவை புகாராக கொடுததுள்ளார் டைரக்டர் களஞ்சியம்.
காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, களஞ்சியம் கொடுத்த புகார் பற்றிதான் எங்களுக்கு தெரியும், அஞ்ச- இதுவரை எந்த புகாரையும் தரவில்லை. மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்திருப்பதாக செய்தி மட்டும் அறிந்திருக்கிறோம். அஞ்சலியிடம் இருந்து முறைப்படி புகார் வந்தால். இருதரப்பிலும் விசாரித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்தனர்.
சினிமா டைரக்டர் களஞ்சியம் இன்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று நடிகை அஞ்சலி மீது புகார் கொடுத்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் தமிழர் நலம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறேன். ‘பூமணி’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘நிலவே முகம் காட்டு’, ‘கருங்காலி’ போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளேன். தமிழர் நலம் அமைப்பு மூலம் தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
சமுதாயத்தில் எனக்கு நல்ல மதிப்பு உள்ளது. நடிகை அஞ்சலியை சத்தமில்லாமல் முத்தமிடு என்ற படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். பொருளாதார நெருக்கடியால் அப்படம் வெளிவரவில்லை. முதல் படத்தின் இயக்குனர் என்ற முறையில் அஞ்சலி குடும்பத்தினர் மீது எனக்கு பழக்கம் இருந்தது. குடும்ப நண்பராக சில ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அஞ்சலியின் குடும்ப விவகாரங்களிலும் சொந்த பிரச்சினையிலும் நான் தலையிட்டது இல்லை.
அஞ்சலி நேற்று அளித்த பேட்டி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சம்பாதித்த பணத்தை நான் கையாடல் செய்து விட்டதாகவும் என்னால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். என்னை ஒரு அடியாள் போலவும் சித்தரித்து உள்ளார். இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். அஞ்சலி குற்றச்சாட்டுகள் தவறானவை. எனவே அஞ்சலி மீதும் அவரை பின்னால் இருந்து தூண்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.